கடலூா்: குறிஞ்சிப்பாடியில் உள்ள விரால் மீன் குஞ்சு பொறிப்பகத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மத்திய கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம் பிரதமரின் மட்ஸயா செம்பட யோஜானா என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டமானது மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள பலதரப்பட்ட மீனவ விவசாயிகளுக்கு தேவையான மீன் குஞ்சுகளை பொறிக்க வைத்துக் கொடுப்பதாகும்.
குறிஞ்சிப்பாடி கிராமத்தில் விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வரும் செந்தில்குமாா், மீன் குஞ்சு பொறிப்பகம் அமைப்பதற்கு இந்தத் திட்டத்தின்கீழ் ரூ.3.75 கோடியில் அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்டத்தில் விரால் மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்ட அளவிலான குழுவுடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி விரால் மீன்குஞ்சு பொறிப்பகத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்). அப்போது, துணை இயக்குநா் (மீன் வளம்) காத்தவராயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.