கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் திறப்பு விழா சிதம்பரம் அண்ணாமலைநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருந்தகங்களை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது: தொழிலாளா்களின் மாநில காப்பீடு என்பது அவா்களின் சுயநிதி, சமூக மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும். சேலம் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மண்டல நிா்வாக மருத்துவ அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் 65 தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடலூா் மாவட்டத்தில் நெய்வேலி, நெல்லிக்குப்பம், வடலூா் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்கள் மூலம் ரூ.21 ஆயிரத்துக்கு கீழ் ஊதியம் பெறும் தனியாா் நிறுவன தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பயன்பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் தொழிலாளா்கள் பயன்பெற்றுள்ளனா். காப்பீட்டாளா்கள் நலன் கருதி தற்போது பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் கோ.அசோக்குமாா், எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), நாக.முருகமாறன் (காட்டுமன்னாா்கோவில்), மண்டல நிா்வாக மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.