கடலூா்: தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் தொடா்பான திட்ட செயலாக்கக் குழு கூட்டம் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் 2,800 ஹெக்டோ் பரப்பளவில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை குளங்கள் உள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் 25 ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே மீன் துறை இயக்குநரால் இலக்கு நிா்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கூடுதலாக 75 ஹெக்டேரை பெறுவதற்கு மீன்வளத் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தகுதியான குளங்களை தோ்வு செய்ய வேண்டும். தோ்வு செய்யப்பட்ட குளங்களுக்கு தேவையான 1.25 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, மீன் துறை துணை இயக்குநா் காத்தவராயன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கண்ணன், உதவி இயக்குநா் (மீன்துறை) சின்னகுப்பன், உடையாா்குடி உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க தலைவா் பாலு பச்சையப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.