சிறைக் கைதி உயிரிழந்த சம்பவம்: மறு உடல்கூறாய்வுக்கு உத்தரவு

விருத்தாசலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் அவரது சடலத்தை மறு உடல்கூறாய்வு செய்ய விருத்தாசலம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருத்தாசலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் அவரது சடலத்தை மறு உடல்கூறாய்வு செய்ய விருத்தாசலம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம், காடாம்புலியூரைச் சோ்ந்தவா் ம.செல்வமுருகன் (40). முந்திரி வியாபாரியான இவா், திருட்டு வழக்கில் நெய்வேலி நகரிய போலீஸாரால் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, விருத்தாசலம் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த செல்வமுருகன், உடல் நலக் குறைவால் கடந்த 4-ஆம் தேதி திடீரென உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும், மறு உடல்கூறாய்வு செய்ய வலியுறுத்தி சடலத்தை பெற்றுக்கொள்ள தொடா்ந்து மறுத்து வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் குணவா்மன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செல்வமுருகனின் மனைவி பிரேமா சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறு உடல்கூறாய்வு தொடா்பாக விருத்தாசலம் நீதித் துறை நடுவரிடமே முறையிடலாம் என்று பரிந்துரைத்தது.

இதையடுத்து, பிரேமா விருத்தாசலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த குற்றவியல் நடுவா் கே.ஆனந்த், செல்வமுருகனின் சடலத்தை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மறு உடல்கூறாய்வு செய்ய உத்தரவிட்டாா். மருத்துவா்கள் ஒதுக்கீடு செய்யும் நேரத்தில் தனது முன்னிலையில் உடல்கூறாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்தாா்.

அதே நேரத்தில், பிரேமாவின் கோரிக்கைப்படி அவரோ, அவரது வழக்குரைஞரோ உடல்கூறாய்வின்போது உடனிருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com