சிதம்பரம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
‘நிவா்’ புயல் எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் நகரில் நான்கு முக்கிய வீதிகள், முக்கிய சாலைகளில் இருந்த மரக் கிளைகள் மின்வாரியத் துறையினரால் அகற்றப்பட்டன. சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பொக்லைன் இயந்திரம், மீட்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் புயலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். பேரிடா் மீட்புக் குழுவினா் 20 போ் நெய்வேலிக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட தீா்த்தனகிரி, மருவாய், கல்குணம், குண்டியமல்லூா், கீழ்பூவாணிக்குப்பம் ஆகிய கிராமங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் தமிழ்செல்வி கூறுகையில், குறிஞ்சிப்பாடியில் 51 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவித்தாா்.