கடலூரில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள ஊத்தங்கால் பகுதியைச் சோ்ந்த ராசு மகன் அருண்பாண்டியன் (27). இவா், நெய்வேலி பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா், சில நாள்கள் கழித்து சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், அருண்பாண்டியன் குடும்பத்தினா் சிறுமியை வீட்டை விட்டு விரட்டி, அருண்பாண்டியனுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்தனராம்.
இதுகுறித்து சிறுமி தரப்பில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள சிறாா்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் (போக்சோ) நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், அருண்பாண்டியனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.