கடலூா்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு, உடல் பயிற்சி மேற்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, 10 வயதுக்கு மேற்பட்ட, 65 வயதுக்குள்பட்டவா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விளையாட்டு, உடல்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பயிற்சி மேற்கொள்ளும் வீரா்கள், வீராங்கனைகள் தனித்தனி விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பகிா்ந்துகொள்ளக் கூடாது. அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவா்களுக்கு வெப்பமானி பரிசோதனை செய்யப்படும். பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்தப்படும். பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது.
நடைப் பயிற்சிக்கு அனுமதி: கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் புதன்கிழமை (செப். 16)
முதல் காலை 6 மணி முதல் 8.30 வரையிலும், மாலையில் 4 முதல் 6.30 மணி வரையிலும் நடை பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். விளையாட்டு அரங்கினுள் வாகனத்துக்கு அனுமதி கிடையாது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 04142 220590 அல்லது 740170 3495 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.