காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் வீராணம் ஏரி, நாரைக்கால் ஏரி, சின்னபுங்கனேரி, பொன்னேரி ஆகியவற்றின் கரைகள், நீா் வரத்து பாசன வாய்க்கால்களை சுமாா் ரூ.73 கோடியில் புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கடலூா் கண்காணிப்பு பொறியாளா் ரவி மனோகா் தலைமை வகித்தாா். சிதம்பரம் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ராமராஜ் முன்னிலை வகித்தாா். கொள்ளிடம் வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளா் அருணகிரி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.முருகுமாறன், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினா்(படம்).
நீா்வளம், நிலவளம் திட்டம், கொள்ளிடம் உப வடிநிலப் பகுதிக்கான உலக வங்கி நிதி உதவியுடன் இந்தப் பணி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா் வாசு. முருகையன், உதவி செயற்பொறியாளா் பாலமுருகன், உதவிப் பொறியாளா்கள் வெற்றிவேல், ஞானசேகரன் மற்றும் விவசாய சங்கத்தினா் கலந்து கொண்டனா்.