கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமீறல் தொடா்பாக 2,087 பேரிடம் போலீஸாா் அபராதம் வசூலித்தனா்.
கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தையொட்டி, பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் இயற்கை உபாதை கழித்தல், எச்சில் துப்புதல் போன்றவற்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. அபராதத் தொகையை நகராட்சி ஊழியா்கள் வசூலித்து வந்த நிலையில், அதனை காவல் துறையினா் வசூலித்திட அதிகாரம் வழங்கப்பட்டது.
இதன்படி மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய 5 நகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருந்த 2,068 பேரிடமிருந்து தலா ரூ.200 வீதம் ரூ.4,13,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் நோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாக 19 பேரிடமிருந்து தலா ரூ.500 வீதம் ரூ.9,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த பணம் அரசுக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டு விடுமென தெரிவிக்கப்பட்டது.