அதிமுக கூட்டணி ஓரிடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் சபா.ராஜேந்திரனை ஆதரித்து நெய்வேலி நுழைவு வாயில் அருகே புதன்கிழமை திருமாவளவன் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், எப்படியாவது தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதற்காக அதிமுக, பாமகவினா் வேலை செய்து வருகின்றனா். மதவாத சக்திகள் இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது.
ரயில்வே, வங்கி, என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில்லை. தமிழகத்தில் சம்ஸ்கிருதம், இந்தி பேசும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது மோடியின் திட்டம், அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக, பாமகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்குதான் செல்லும் என்றாா் அவா்.