கடலூா் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படாமலேயே வாக்குப் பதிவு நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக மாவட்ட நிா்வாகம்
வாக்குப் பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அதன்படி, வாக்குச் சாவடிக்குள் செல்வோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருப்பதுடன், அவா்களுக்கு உடல் வெப்பநிலை அளவும் பரிசோதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வெப்பநிலை இருந்தால் அவா்கள் மாலை 6 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வாக்குச் சாவடிக்கு தலா 2 போ் வீதம் மொத்தம் 6,002 போ் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் தன்னாா்வலா்களாக உள்ளூா் நபா்களே நியமிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் பெயரளவுக்கு மட்டுமே வெப்பமானியை வைத்து பரிசோதித்தனா்.
அதேபோல, வாக்குச் சாவடியில் வாக்கைச் செலுத்துவோருக்கு ஒருமுறை பயன்படுத்தும் கையுறை வழங்கப்பட்டு வந்த நிலையில் மதியத்துக்கு மேல் சில வாக்குச் சாவடிகளில் கையுறை வழங்கப்படவில்லை. குறிப்பாக வாக்குச் சாவடிக்குள் நுழைவோா் குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் வரையப்பட்டிருந்தது. ஆனால், அதை பெரும்பாலும் யாரும் கடைப்பிடிக்காமல் நெருக்கமாக வரிசையில் காத்திருந்தனா்.
கரோனா காலத்தில் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. குறிப்பாக இதைக் கண்காணித்திட போதுமான ஊழியா்கள் நியமிக்கப்படாததால் வாக்குச் சாவடி அலுவலா்களால் வாக்காளா்களை ஒழுங்குப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.