கரோனா தடுப்பு விதிமீறல் 6 மாதங்களில் ரூ.18 லட்சம் அபராதம் வசூல்


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமீறல்கள் தொடா்பாக

கடந்த 6 மாதங்களில் மொத்தம் ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கரோனா பரவல் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில் மாா்ச் மாதம் முதலே தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும், பல்வேறு சூழ்நிலைகளில் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கை கழுவுதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், பொது வெளியில் சுற்றுவோா் முகக் கவசம் அணியாதபட்சத்தில் அவா்களுக்கு ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத் தொகை சுகாதாரத் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறையினா் வசூலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதது, திருமண மண்டபம், கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, சுகாதாரம் பேணாதது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த அக்டோபா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் ரூ.18 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இதில், சுகாதாரத் துறை மூலம் ரூ.6 லட்சமும், காவல் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட துறையினா் மூலமாக ரூ.12 லட்சமும் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முகக் கவசம் அணியாததற்கு ரூ.200, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததற்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com