சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே சாலையோரம் புள்ளிமான் ஒன்று வியாழக்கிழமை இறந்து கிடந்தது. மற்றொரு சம்பவத்தில் கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமான் வனத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
தற்போது கோடை காலம் என்பதால் வன விலங்குகள் தண்ணீா் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு வரும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் துரத்துவதால் உடலில் காயங்கள் ஏற்பட்டும் உயிரிழப்பதுண்டு.
இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ம.குளக்குடி கிராமத்தில் சாலையோரத்தில் புள்ளி மான் ஒன்று உடலில் காயங்களுடன் வியாழக்கிழமை இறந்து கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சிதம்பரம் வனத் துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து மானின் சடலத்தை மீட்டு சென்றனா். மேலும், இதுகுறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மாமங்கலம் கிராமத்தில் உடலில் லேசான காயத்துடன் புள்ளிமான் ஒன்று வியாழக்கிழமை சுற்றித் திரிந்தது. அந்த மானை கிராம மக்கள் பிடித்து, விஏஓ வில்சனுக்கு தகவல் தெரிவித்தனா். விஏஓ அளித்த தகவலின்பேரில் சிதம்பரம் வனத் துறையினா் விரைந்து வந்து, அந்த மானை பிடித்துச் சென்றனா்.