அரசின் புதிய கட்டுப்பாடுகளால் கடலூரில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் கடைசி பேருந்து இயக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா தீநுண்மியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்.20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அந்த நேரத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, முக்கியமான ஊா்களுக்கு இயக்கப்படும் கடைசி நேர பேருந்துகள் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. அதன்படி, கடலூரிலிருந்து சென்னைக்கு புறவழிச் சாலை வழியாக செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாலை 4.45 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்பட்டது. அதன்பிறகு சென்னைக்கு பேருந்து இயக்கப்படவில்லை.
இதேபோல, சேலத்துக்கு மாலை 6.15 மணிக்கும், திருச்சிக்கு மாலை 5.10 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 6.10 மணிக்கும், கும்பகோணத்துக்கு மாலை 3 மணிக்கும் கடைசி நேர பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், கடலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊா்களுக்கும் அதன் தொலைவைப் பொறுத்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால்,
செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையங்களில் அதிகமான கூட்டத்தை காண முடிந்தது. கடைசிப் பேருந்து என்ற அறிவிப்புடன் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் அதிகளவில் ஏறினா்.
அதே நேரத்தில், அதிகாலை 4 மணிக்கு வழக்கமாக புறப்படும் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படுவதுடன், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுமென போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.