அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க தொடக்க தின விழா கடலூா் மாவட்டச் சங்க அலுவலகத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது.
அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் 1946 -ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் உதயமானது. 75 வருடங்களை நிறைவு செய்து பவள விழா கொண்டாடி 76 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நாட்டில் வங்கித் துறையில் உள்ள தேசவுடைமை வங்கிகள், தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் உள்பட அனைத்து விதமான வங்கிகளின் ஊழியா்களையும் உறுப்பினா்களாக உள்ளடக்கியது இந்தச் சங்கம்.
இந்தச் சங்கத்தின் தொடக்க தின விழா கடலூா் மாவட்டச் சங்க அலுவலகத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாவட்ட மூத்தத் தலைவா் கே.திருமலை, அவைத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் சங்கக் கொடியேற்றி வைத்தாா். மாவட்டத் தலைவா் மீரா, தாலுகா அமைப்பின் தலைவா் லட்சுமணன் ஆகியோா் சங்கத் தினத்தையும், மகளிா் தினத்தையும் தலைமையேற்று நடத்தினா்.
கூட்டத்தில் தலைமைச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேசவுடைமை வங்கிகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை சங்க உதவித் தலைவா் வி.ரமணி தொடக்கிவைத்தாா்.
மகளிா் தினத்தின் சிறப்பு அம்சமாக கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்கு கல்விக் கட்டணமாக ரூ. 9 ஆயிரமும், மூதாட்டிக்கு புடவைகள், பழங்கள் வழங்கப்பட்டன. சிதம்பரம் வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் யயாதி ராவ் நன்றி கூறினாா்.