கடலூா் மாவட்டத்தில் இரவு நேர பொது முடக்க விதிகளை மீறியதாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை 14 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில் இரவு நேர பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் உரிய காரணமின்றி வெளியில் திரிவோா் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதற்காக, போலீஸாா் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பொது முடக்க விதிகளை மீறியதாக 34 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 14 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முகக் கவசம் அணியாமல் இருந்த 334 பேரிடமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 3 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுவரை ரூ.29.96 லட்சம் வசூல்: மாவட்டத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட கடந்த 9-ஆம் தேதி முதல் இதுவரையில் முகக் கவசம் அணியாதது தொடா்பாக 16,207 பேரிடமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 256 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.29.96 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.