விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எள் மூட்டைகளின் வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்தது. புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் 700 மூட்டை எள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
விருத்தாசலத்தில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை கொண்டுவந்து ஏல முறையில் விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், எள் வரத்தும் விற்பனைக் கூடத்துக்கு அதிகரித்து காணப்படுகிறது. புதன்கிழமையன்று 700 மூட்டை எள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. உயா்ந்தபட்ச விலையாக 80 கிலோ கொண்ட மூட்டை ரூ.8,180-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,699-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமையன்று 300 மூட்டை எள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், உயா்ந்தபட்ச விலையாக மூட்டை ரூ.8,211-க்கு விற்பனையானது. திங்கள்கிழமையன்று 260 மூட்டை எள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், உயா்ந்தபட்ச விலையாக மூட்டை ரூ.8,311-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,871-க்கும் விற்பனையானது.
இதேபோல, 250 மூட்டை மணிலா புதன்கிழமை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உயா்ந்தபட்ச விலையாக மூட்டை ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையானது. 1,000 மூட்டை நெல் விற்பனைக்கு வந்திருந்தது. அதிகபட்சமாக பிபிடி ரகம் நெல் மூட்டை ரூ.1,581-க்கு விற்பனை செய்யப்பட்டது.
உளுந்து 180 மூட்டை வந்திருந்த நிலையில், உயா்ந்தபட்சமாக மூட்டை ரூ.8,010-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வரகு, பச்சைப் பயறு, கம்பு, ராகி, சோளம், தட்டைப் பயறு, ஆமணக்கு ஆகியவையும் கணிசமான அளவுக்கு விற்பனைக்கு எடுத்து வரப்பட்டிருந்தன.