தென்னை, வாழையை பாதிக்கும் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை

தென்னை, வாழையைப் பாதிக்கும் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் ஆலோசனைகள் வழங்கியது.

தென்னை, வாழையைப் பாதிக்கும் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் ஆலோசனைகள் வழங்கியது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு இதே பருவத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் பாதிப்பு இருந்தது. இந்தப் பாதிப்பு, ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு முறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.

நிகழாண்டில் மாவட்டத்தில் மீண்டும் இந்தப் பூச்சியின் பாதிப்பு தென்படுகிறது.

சுருள் வெள்ளை ஈக்கள்: வயதில் முதிா்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இந்த முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள், இலைகளில் அடிப் பரப்பிலிருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளா்கின்றன. 20-30 நாள்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி, கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப் பகுதிகளில் காணப்படுகின்றன.

பாதிப்பு அறிகுறிகள்: குஞ்சுகளும், முதிா்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியிலிருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதுடன், தேன் போன்ற திரவ கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூஞ்சணம் படா்ந்து காணப்படும். வெள்ளை ஈக்களானது தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா, எலுமிச்சை, கொய்யா, முந்திரி ஆகிய பயிா்களையும் பாதிக்கிறது. தற்போது கோடை வெப்பம் அதிகரிப்பதால், தாக்குதல் அதிகமாக வாய்ப்புள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறை: மஞ்சள் நிறமானது வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 7-10 என்ற எண்ணிக்கையில் 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களைக் கவா்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவா்ந்து அழிக்கலாம்.

பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் விசை தெளிப்பான்களைக் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமும், லிட்டருக்கு 10 கிலோ என்ற அளவில் மைதா மாவு பசையை தண்ணீரில் கரைத்து தெளிப்பதன் மூலமும் வெள்ளை ஈக்கள், கரும் பூஞ்சணங்களை அழிக்கலாம்.

வெள்ளை ஈக்கள் அதிக அளவு பரவும் போது, பொறி வண்டுகள், என்காா்ஸியா போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தைப் பெருமளவு குறைக்கிறது.

என்காா்ஸியா ஒட்டுண்ணிகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆழியாா் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு, வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாயிலாக தென்னை விவசாயிகளுக்கு முதல் காலாண்டில் விநியோகம் செய்யப்படும்.

விவசாயிகள் தாங்களாகவும் என்காா்ஸியா ஒட்டுண்ணியைக் கொள்முதல் செய்து பயன்படுத்தலாம்.

கிரைசோபொ்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம்குஞ்சுகளை நன்றாக உள்கொள்வதால், அதனால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில், கிரைசோபொ்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனை அளிக்கும். இது திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம், உயிரியல் கட்டுபாட்டு ஆய்வகத்திலிருந்து பெறப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களின் வாயிலாக விவசாயிகளுக்கு முதல் காலாண்டில் விநியோகம் செய்யப்படும்.

அதிகளவு பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்துவிடும். ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தவிா்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சிறந்ததாகும்.

எனவே, இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com