சாராயம் கடத்தியவரை தடுப்புக் காவலில் கடலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், ஆய்வாளா் பத்மா தலைமையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கம்மியம்பேட்டை பாலம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பைக்கில் சாராயம் கடத்தியதாக கடலூா் முதுநகரைச் சோ்ந்த ர.ஸ்ரீகுமரன் (32) என்பவரை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். அவரிடமிருந்து 120 லிட்டா் புதுச்சேரி மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா் விசாரணையில் ஸ்ரீகுமரன் மீது கடலூா் முதுநகா், திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையங்கள், மதுவிலக்கு அமல் பிரிவில் தலா 2 சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்றவியல் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன்படி, அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டாா்.
இதையடுத்து, ஸ்ரீகுமரனை ஓராண்டுக்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.