தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு வடலூரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதனை முன்னிட்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கடலூரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கட்சியின் மாவட்ட மாநாட்டில் மாவட்ட, மாநில பிரச்னைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதனை அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்ததாவது, தமிழக அரசு பல சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. எனினும், எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தியாவிலேயே குடிப்பழக்கம் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். மாநில அரசின் நிதிநிலை மேம்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்தும்.
ஆனால், மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தான் அரசின் நிதிநிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது என்றார். மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், நிர்வாகிகள் கோ.மாதவன், வி.சுப்புராயன், ஆர்.அமர்நாத், மு.மருதவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.