கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பழனி மகன் வினோத்குமார் (33), எலக்ட்ரிசியன். இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சத்திற்கு சீர்வரிசைப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டதாம். மேலும், ஆடி மாத சீராக 4 பவுன் வழங்கப்பட்டதாம்.
இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர் பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 பவுன் நகையை அடமானம் வைத்தார்களாம். இதற்கு, சூர்யா எதிர்ப்புத் தெரிவித்ததால் அன்று முதல் மாமனார் மா.பழனி (53), மாமியார் ராஜேஸ்வரி (47), நாத்தனார் ரா.விந்தியா ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு, அவருக்கு குழந்தை இல்லாததையும் குறை கூறி வந்தனர். மேலும், குழந்தை இல்லாதததற்காக புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சூர்யாவை சாப்பிட வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த சூர்யாக கடந்த 14-3-2018 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று, நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், சூர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகளும், விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர் க.செல்வபிரியா கூறினார்.