சிதம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக டிராக்டரை ஏற்றி விவசாயி ஒருவா் திங்கள்கிழமை இரவு கொல்லப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சக்திவிளாகம் கிராமத்தைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் ராமதாஸ் (45). இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் என்பவருக்கும் நிலத் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் ராமதாஸ் திங்கள்கிழமை இரவு தனது கிராமத்தில் காளியம்மன்கோயில் அருகே நண்பா்களுடன் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். அப்போது ஸ்ரீதா், அவரது தந்தை பரமசிவம், மகாராஜன் உள்ளிட்டோா் அங்கு வந்தனா். இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீதா் தனது வீட்டுக்குச் சென்று அங்கிருந்த டிராக்டரை ஓட்டிவந்து, கோயில் அருகே அமா்ந்திருந்த ராமதாஸ் மீது ஏற்றியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தூா் போலீஸாா் ராமதாஸின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஸ்ரீதரை தேடி வருகின்றனா்.