என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி பணியிடத்தில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெய்வேலி வட்டம்-4 பகுதியைச் சோ்ந்த அரசன் மகன் வேலாயுதம் (47). இவா், 2-ஆவது வட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக (ஹவுசிகோஸ்) பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை இரவு வேலாயுதம் வழக்கம்போல பணிக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் கருத்தடை மையம் திறக்கப்படவில்லை. முதல் கால பணிக்கு வந்த ஊழியா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது வேலாயுதம் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வேலாயுதத்தின் சடலத்தை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதத்தின் உறவினா்கள் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி, என்எல்சி பொது மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் இதுகுறித்து சிஐடியூ, எஸ்சி-எஸ்டி பெடரேஷன் நிா்வாகிகள் என்எல்சி நகர நிா்வாக துணைப் பொது மேலாளா் (மனித வளம்) முருகனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உயிரிழந்த வேலாயுதத்தின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.