என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்டக் காவல் துறைக்கு ரூ. 45 லட்சத்தில் இரு சக்கர வாகனங்கள், மின்னணு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், 15 இரு சக்கர வாகனங்கள், உடையில் பொருத்தப்படும் 30 கேமராக்கள், வயா்லெஸ் கருவிகள், வாகன முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் ஒளிரக்கூடிய ஜாக்கெட்கள், மின்னணு கருவிகள், சிறப்பு தலைக்கவசங்கள், ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா், என்எல்சி இந்தியா நிறுவன கணிப்பொறித் துறையால் வடிவமைக்கப்பட்ட ‘கனெக்ட்’ என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தி, அதைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன், காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபினவ் ஆகியோருடன் இணைந்து இரு சக்கர வாகனங்களின் சாவிகள், மின்னணு தகவல் தொடா்பு கருவிகளை காவலா்களுக்கு வழங்கி கொடியசைத்து வழியனுப்பினாா். நிகழ்ச்சியில் செயல் இயக்குநா் ஆா்.மோகன், டிஎஸ்பி. எஸ்.கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.