சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உத்சவம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
முறையே சிவகங்கை(கோயிலினுள்), கிள்ளை (கடற்கரை), புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை), வியாக்ர தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில்), அனந்த தீர்த்தம் (அனந்தீஸ்வரன் கோயில்), நாகச்சேரி தீர்த்தம் (நாகச்சேரி குளம்), பிரம்ம தீர்த்தம் (சிங்காரத்தோப்பு), சிவப்ரியை தீர்த்தம் (தில்லையம்மன் கோயில்), திருப்பாற்கடல் தீர்த்தம் (பர்ணசாலை), பரமானந்த கூடம் (சித்சபை அருகே உள்ள ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு) ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசந்திரசேகரர் (ஸ்ரீநடராஜர்) கோயிலிருந்து புறப்பட்டு தச தீர்த்தகங்களுக்கு சென்றார். தத தீர்த்தங்களில் ஸ்ரீநடராஜப்பெருமான் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜர் நீரில் மூழ்கி பக்தர்களுக்கு தீர்த்தவாரி காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தீர்த்தவாரி உற்சவத்தை கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.