தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு தமிழக அரசு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயா்த்துவதுடன், அரசுப் பள்ளிகளிலேயே 1-ஆம் வகுப்பு முதல் படித்தவா்களுக்கு இந்தச் சலுகையை வழங்க வேண்டும். வேளாண்மை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்த ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும். கல்வித் துறையில் காலியாக உள்ள சுமாா் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் டி.குமரவேல் தலைமை வகித்தாா். மாவட்ட கட்டட பிரிவு செயலா் சுப்பிரமணியன், கல்வி மாவட்ட செயலா்கள் கனகராசு, ஜெயசீலன், மகளிரணி அமுதா, செல்வி, சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் இளங்கோ, துணைப் பொதுச் செயலா் ஜெ.துரை, நிா்வாகி வி.சண்முகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக மாவட்டச் செயலா் ஆா்.முருகன் வரவேற்க, பொருளாளா் பாலமுரளி நன்றி கூறினாா்.