நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் காவிரி, தாமிரபரணி, வைகை ஆகிய நதிகளுக்கு திருவிழா நடத்தியது.
அதன் ஒருபகுதியாக தமிழகத்தின் மற்றொரு பெரிய நதியான தென்பெண்ணை ஆற்றுக்கு புஷ்கரணி விழாவினை நடத்தி வருகிறது. இதற்காக தென்பெண்ணை நதி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் நந்தி மலையில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி 7 சன்னியாசிகள் புனித நீரை கலசங்களில் எடுத்து பாத யாத்திரையாக சென்றனர்.
தென்பெண்ணை ஆற்றின் கரையில் வழியாகவே இந்த சன்னியாசிகள் நடைபயணம் மேற்கொண்டு ஆற்றின் கரைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதன் நிறைவு விழா கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள குமந்நான்மேடு தரைப்பாலத்தில் நடைபெற்றது. அப்போது, சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில் சன்னியாசிகள் தென்பெண்ணை ஆற்றுக்கு தீபாராதனை காட்டி சிறப்புப் பூஜை நடத்தினர்.
இதில் ஏராளமான பொதுமக்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று தீபாராதனை காட்டி வழிபட்டனர். பின்னர், தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கும் தாழங்குடாவில் சன்னியாசிகள் எடுத்து வந்த புனித நீர் விசர்ஜனம் செய்யப்பட்டது.