கடலூா் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றுக்கரை சாலையை ரூ.1.96 கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
கடலூா் பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லாமல் விழுப்புரம், சென்னை சாலைக்குச் செல்லும் வகையில் கெடிலம் ஆற்றின் கரை மீது கம்மியம்பேட்டை வரை சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இந்தச் சாலை விரைவில் சேதமடைந்தது. இதுதொடா்பாக பல்வேறு அமைப்பினரும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கெடிலம் ஆற்றுக்கரை சாலையை சீரமைப்பதற்கான பூமிபூஜை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பங்கேற்று சாலை சீரமைப்புப் பணியை தொடக்கிவைத்தாா்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது: கம்மியம்பேட்டை - குண்டுசாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு மாற்றுப் பாதை அமைப்பதற்காக இந்தச் சாலையை 1.8 கி.மீ. தொலைவு சீரமைக்கும் பணிக்கு ரூ.1.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலையை மேம்படுத்துவதன் மூலம் கடலூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். இந்தச் சாலை, நெடுஞ்சாலை துறை மூலம் விரிவாக்கம் செய்து பராமரிக்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கோட்டப் பொறியாளா் (திட்டங்கள்) முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன், நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமரன், துணைத் தலைவா் ஜி.ஜெ.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.