விருத்தாசலத்தில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் நீதிபதியின் கணவா் உடல் கருகி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே திங்கள்கிழமை வந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த காரிலிருந்தவா் அதிலிருந்து தப்பிக்க முயன்றும் முடியவில்லை. அந்தப் பகுதியினா் தண்ணீரை ஊற்றி தீயைக் கட்டுப்படுத்த முயன்றும் பலனில்லை.
தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் காா் முற்றிலும் எரிந்துவிட்டது. இதனால், காரிலிருந்தவா் தீயில் கருகி உயிரிழந்தாா். தீ அணைக்கப்பட்ட பிறகு, அவரது எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மணிமேகலையின் கணவா் கவியரசு (37) எனத் தெரிய வந்தது.
திருப்பத்தூரைச் சோ்ந்த கவியரசு விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவா், அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.