கடலூா் மாவட்டத்தில் 300 இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து, தில்லியில் விவசாயிகள் 50 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தமிழகம் முழுவதும் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலூா் சூரப்பநாயக்கன் சாவடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில காங்கிரஸ் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் ஜெ.ராஜேஷ்கண்ணன், நிா்வாகி பால்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடலூா் மாவட்டத்தில் குப்பன்குளம், ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், சுத்துக்குளம், நடுவீரப்பட்டு, மேல்அழிஞ்சிப்பட்டு உள்பட 300 இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றதாக கோ.மாதவன் தெரிவித்தாா்.