பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், மாணவர்கள் 47ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 47ஆவது நாளாக போராட்டம்.
சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 47ஆவது நாளாக போராட்டம்.

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், மாணவர்கள் 47ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்து விட்டு தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், அரசு மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த 47 நாள்களாக பல்வேறு வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 

இதனையடுத்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மறுதேதி குறிப்பிடாமல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது. விடுயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உணவு விடுதியும் மூடப்பட்டது. மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருக்கும் குறுஞ்செய்தியை அனுப்பியது. இதனையடுத்து மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து 4 நாளாக மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் சென்று மாணவர்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 27-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தலாம்.  எனவே, தற்போது போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனையடுத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவர்கள் சங்கம் ஆதரவு: ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்பாடவிடில் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்தும் என அச்சங்க மாநில செயலாளர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார். இதேபோன்று தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் ஆதரவு தெரிவித்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்பாடவிடில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அச்சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் புலிகேசி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com