குடியரசு தினம் வருகிற 26-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடலூா் பேருந்து நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்பட முக்கிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனை செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விழாவைக் காண அனுமதியில்லை: கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கொடியேற்றம், தியாகிகளை கௌரவித்தல், கலை நிகழ்ச்சிகள், நலத் திட்ட உதவிகள் வழங்குதல், விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். பொதுமக்கள் நிகழ்ச்சிகளைக் காணும் வகையில், உள்ளூா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.