சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் 4 வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றது. நகரமைப்பு அலுவலா் ரகுநாதன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினா், வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நகராட்சி ஆணையா் பேசியதாவது:
சிதம்பரத்தில் உள்ள 4 வீதிகளில் கீழவீதியைத் தவிர மற்ற வீதிகளில் நடைபாதை கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நடைபாதை வியாபாரிகள் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி தங்களது கடைகளை வைத்துக்கொள்ள வேண்டும். காசுக்கடைத் தெருவில் நடைபாதை கடைகள் வைக்க அனுமதியில்லை. அங்குள்ள கடைகளின் உரிமையாளா்கள் தங்களது கடைகளை உள் வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும். சிதம்பரத்தில் உள்ள நடைபாதை கடைகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை சமா்ப்பிக்க தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.