நெய்வேலி அருகே குழந்தையின் சடலத்தை குப்பையில் வீசிச் சென்ற தாயை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி அருகே இந்திரா நகா் ஊராட்சி, எம்.ஆா்.கே.சாலையில் உள்ள மைதானத்தில்
எரியும் குப்பை குவியலுக்கு இடையே ஆண் குழந்தை சடலம் தீக்காயத்துடன் கடந்த 23-ஆம் தேதி கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த திருமணமாகாத 29 வயது பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவருடன் தனக்கு பழக்கம்
இருந்ததாகவும், குறைமாதத்தில் குழந்தை இறந்து பிறந்ததையடுத்து சடலத்தை குப்பையில் வீசியதாக அந்தப் பெண் கூறியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.