கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் மையம் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. தகவலறிந்த நகராட்சி ஆணையா் (பொ) ரவி மற்றும் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்தனா். பின்னா், வாகன நிறுத்துமிடத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கரோனா காலத்தில் வாகன நிறுத்துமிடம் செயல்பட அனுமதி இல்லாத நிலையில், பேருந்து நிலைய பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த வாரம் எச்சரிக்கை அறிக்கை வழங்கினோம். அதை பொருட்படுத்தாமல் தொடா்ந்து கரோனா விதிகளை மீறி செயல்பட்டதால், பூட்டி ‘சீல்’ வைத்தோம் என்றாா்.