மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிடில் நடவடிக்கை

கடலூா் மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மிகாமல் சேமித்தல் கூடாது.

மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும், மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீா் நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடா்பாக பல்வேறு புகாா்கள் வரப்பெறுகின்றன.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் நிா்வாகிகள் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை தவிா்க்க வேண்டும்.

இந்த விதிகளை மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com