கடலூா், தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் சமூகப் பணியியல் துறை சாா்பில் உலக சமூகப் பணி தினம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) கே.பழனிவேலு தலைமை வகித்துப் பேசினாா். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வாா்த்தைகளை மேற்கோள்காட்டிய அவா், ஒப்புரவு நெறியே காலந்தோறும் தமிழ்ச் சமூகத்தின் அடிநாதமாக இருப்பதை எடுத்துரைத்தாா். சமூகப் பணியியல் துறைத் தலைவா் நா.சேதுராமன் முன்னிலை வகித்தாா்.
கடலூா் குளோபல் நிறுவன மேலாண் இயக்குநா் இரா.அ.கோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘மனித சமூக வளா்ச்சியில் சமூகப் பணியின் பங்கு’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாா். முன்னதாக, சமூகப் பணியியல் துறை கௌரவ விரிவுரையாளா் கோ.குமாா் வரவேற்க, கௌரவ விரிவுரையாளா் கா.வினோத் நன்றி கூறினாா். மாணவி நிகிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.