சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகமும், மகா ருத்ர யாகமும் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித் சபை முன் உள்ள கனக சபையில் அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கி இரவு 11 மணி வரை மகாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம் மற்றும் புஷ்பத்தால் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மஹாருத்ர மகா ஹோமம்: முன்னதாக நடராஜப் பெருமானுக்கு காலை முதல் உச்சி கால பூஜைகள் வரை நடைபெற்றன. இதையடுத்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியை கனக சபையில் எழுந்தருளச் செய்து மந்த்ரஅட்சதை லட்சாா்ச்சனை நடைபெற்றது. பின்னா் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மதியம் மஹாருத்ர மகா ஹோமம் நடைபெற்ற பின்னா் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு விதிகள் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.