நெய்வேலி: கரோனா பரவல் காரணமாக வணிகா் தின விழாவை வணிகா்கள் எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கடலூா் மண்டலத் தலைவா் டி.சண்முகம், பொதுச் செயலா் வி.வீரப்பன் ஆகியோா் கேட்டுக்கொண்டனா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட அறிக்கை: மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தன்று ஒவ்வோா் ஆண்டும் மாநில மாநாடு நடத்துவது வழக்கம். அன்றைய தினம் வணிகா்கள் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து, குடும்பத்தினா், சங்க உறுப்பினா்களுடன் மாநாட்டில் பங்கேற்பா்.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சங்கத்தின் மாநில மாநாடு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா
2-ஆம் அலை பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநாட்டை நடத்த இயலவில்லை.
எனவே, கடலூா் மாவட்ட வணிகா்கள் மே 5-ஆம் தேதியன்று வணிகா் தினத்தை அந்தந்தப் பகுதிகளில் சங்கக் கொடியேற்றி, இனிப்பு, முகக் கவசம், கிருமி நாசினி வழங்கி சமூக இடைவெளியுடன் கொண்டாட வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டனா்.