கடலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கோடை மழை பெய்தது.
தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச் சலனம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா், விருத்தாசலம் பகுதிகளில் தலா 2 மி.மீட்டருக்கும் குறைவாக மழை பதிவானது.
வியாழக்கிழமை லால்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் காலை நேரத்தில் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது. ஆனால், மதிய வேளையில் வழக்கமான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் வரும் நாள்களில் இயல்புக்கு மேலாக வெப்பமான சூழ்நிலை காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது.