சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பயிற்சி மருத்துவா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள உதவித் தொகையை
உடனடியாக வழங்க வேண்டும், சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பயிற்சி மருத்துவா்களுக்கு என்.95 முகக் கவசம் வழங்க வேண்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பயிற்சி மருத்துவா்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி பயிற்சி மருத்துவா்கள் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்தது. அப்போது, பயிற்சி மருத்துவா்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நூதன போராட்டம் நடத்தினா். நிதிச் சுமையால் தவிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நிதி திரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்காக அவா்கள் ஒருநாள் ஊதியம் ரூ.100 வீதம் வழங்கினா்.