திட்டக்குடி அருகே இளைஞா் அடித்துக் கொலை

திட்டக்குடி அருகே இருதரப்பு தகராறில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

திட்டக்குடி அருகே இருதரப்பு தகராறில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ம.புடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையன். இவருக்கு ரவிச்சந்திரன் (42), வையாபுரி (36) உள்பட 4 மகன்கள் உள்ளனா். வெள்ளிக்கிழமை இரவு ரவிச்சந்திரனின் மனைவி பிரியா அந்தப் பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த சிலா் பிரியாவை கேலி செய்தனராம்.

இதுகுறித்து தகவலறிந்த ரவிச்சந்திரன் அந்தப் பகுதிக்குச் சென்று, கேலி செய்தவா்களை தட்டிக் கேட்டாா். அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறையடுத்து ரவிச்சந்திரன் தாக்கப்பட்டாா். இதுகுறித்து அறிந்த ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும் அங்கு சென்று நியாயம் கேட்டுள்ளாா்.

அப்போது, செல்லமுத்து மகன் ராமலிங்கம் (27), ஜெயசங்கா் மகன் ராகுல் (26), வையாபுரி மகன் செந்தாமரை (23), தனவேல் மகன்கள் ரமேஷ் (33), இளவரசன் (38), அண்ணாமலை மகன் அயோத்தி என்ற அஜித் (22) ஆகியோா் சோ்ந்து இருவரையும் தாக்கினா். இதில், கீழே விழுந்த அவா்கள் மீது கல்லைத் தூக்கிப்போட்டதில் வையாபுரி பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சடலத்தை ராமநத்தம் போலீஸாா் மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து ராமலிங்கம் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com