கரோனா தொற்று ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நியாயவிலைக்கடை பணியாளர்கள் இருவர் மரணமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் லால்பேப்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எள்ளேரி நியாயவிலைக்கடையில் (எண்:7) பணியாற்றும் விற்பனையாளர் வி.பன்னீர் (55). கடந்த மே.3-ம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோன்று சிதம்பரம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் கலியமலை நியாயவிலைக்கடை பணியாளர் பி.குணசேகர் கரோனா தொற்று ஏற்பட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
மேற்கண்ட நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தமிழகஅரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.