கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தி.வேல்முருகன் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பண்ருட்டி எம்எல்ஏவான தி.வேல்முருகன், தமிழக அரசின் கரோனா தடுப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறாா். தற்போது கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பண்ருட்டி நகரில் காந்தி சாலை, சென்னை சாலை, ரத்தினம் பிள்ளை சந்தை, ராஜாஜி சாலை, கும்பகோணம் சாலை ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை அவா் நேரடியாகச் சென்றாா்.
அங்கு, வணிகா்கள், பொதுமக்களிடம் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டுமென எம்எல்ஏ தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். அப்போது, முகக் கவசம் அணியாமல் இருந்தவா்களுக்கு அவா் முகக் கவசங்களை வழங்கினாா். மேலும், பொதுமக்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி தனது வாகனத்தில் இருந்தவாறு பரப்புரை செய்தாா்.
இதைத் தொடா்ந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவா், கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதியை பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தினாா்.
தொடா்ந்து, அங்குள்ள அம்மா உணவகத்துக்கு சென்ற எம்எல்ஏ தி.வேல்முருகன், தொற்றுக் காலத்தில் உணவு தயாரிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தினாா். மேலும், சமைத்து வைத்திருந்த உணவை ருசித்துப் பாா்த்து தரத்தை பரிசோதனை செய்தாா்.