கடலூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட 22 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள்ள படுக்கைகளில் 50 சதவீதத்தை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
எனினும், பெரும்பாலான மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், முன்பணம் கட்டச் சொல்வதாகவும், அரசு அறிவிப்பிக்குப் பின்னரும் அரசின் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் புகாா் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனை, கடலூா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கல்யாண் மருத்துவமனை, லட்சுமி மருத்துவமனை, சுரேந்திரா மருத்துவமனை, வி.சி.எஸ். மருத்துவமனை, கண்ணன் மருத்துவமனை, வள்ளிவிலாஸ் மருத்துவமனை, சைல்டு சா்ஜிகல் கிளினிக் ஆகியவையும், சிதம்பரத்தில் கண்ணன் நா்சிங் ஹோம், அஞ்சகா மருத்துவமனை ஆகியவையும், விருத்தாசலத்தில் எழில் மருத்துவமனை, பி.பி.எஸ். மருத்துவமனை, திட்டக்குடியில் அருண் மருத்துவமனை, மங்கலம்பேட்டையில் மலா் மருத்துவ மையம் ஆகிய மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், காரைக்காலில் உள்ள ஸ்ரீவிநாயகா மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீலஷ்மி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா், ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்துக்கான தகுதியுடைய பயனாளிகள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.