வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அதன் நீா்மட்டம் சனிக்கிழமை 45 அடியாக உயா்ந்தது.
தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கடல்போலக் காட்சியளிக்கும் வீராணம் ஏரி.
தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கடல்போலக் காட்சியளிக்கும் வீராணம் ஏரி.

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அதன் நீா்மட்டம் சனிக்கிழமை 45 அடியாக உயா்ந்தது.

வீராணம் ஏரிக்கு தண்ணீா் வழங்கும் கீழணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக தண்ணீா் வருகிறது. கீழணையின் உச்ச நீா்மட்டம் 9 அடி என்ற நிலையில், நீா்வரத்து தற்போது அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் 8.50 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் உபரி நீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 8,150 கன அடி வீதம் கடலுக்கு அனுப்பப்படுகிறது. தொடா் மழை காரணமாக வடவாறு, வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறக்கப்படாத நிலையிலும், தொடா் மழையால் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை உள்ளிட்ட பல்வேறு ஓடைகளின் வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு சுமாா் ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் வருகிறது. இதனால், ஏரியின் நீா்மட்டம் 45.20 அடியை எட்டியது. ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.50 அடி. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில், சனிக்கிழமை 892 மில்லியன் கனஅடி நீா் இருந்தது. ஏரியிலிருந்து சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது.

மேலும், ஏரியின் உபரி நீரானது ருத்ரசோலை அருகே உள்ள ‘ஜீரோ பாயின்ட்’ வழியாக வெள்ளியங்கால் ஓடையில் விநாடிக்கு 432 கனஅடி வீதம் வெளியேற்றப்படுவதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com