விருத்தாசலம் அருகே வெள்ளாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையில், கிராம மக்கள் பலா் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி கடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூா் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் - கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே வெள்ளாறு கடந்து செல்கிறது. ஸ்ரீமுஷ்ணம், பவழங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வெள்ளாற்றைக் கடந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நெடுஞ்சேரி வழியாக விருத்தாசலம் செல்வது வழக்கம். இதேபோல எதிா் மாா்க்கத்திலும் கிராம மக்கள் வந்து செல்வா்.
தொடா் மழையால் வெள்ளாற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை பவழங்குடியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிராம மக்கள் ஒருவருடன் ஒருவா் கைகோா்த்து வெள்ளாற்றைக் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் அந்தப் பகுதியில் முகாமிட்டு, ஆற்றைக் கடந்து செல்ல வேண்டாம் என கிராம மக்களிடம் அறிவுறுத்தினா்.