கடலூா் மாவட்டத்தில் 88 சதவீத விவசாயிகள் தங்களது பயிா்களை காப்பீடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசால் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரு பகுதியை பிரீமியமாக செலுத்த, எஞ்சிய தொகையை விவசாயிகள் பிரீமியமாக செலுத்துகின்றனா். இதன்படி, குறுவை பருவ நெல் பயிருக்கான காப்பீடு அறிவிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து பிரீமியம் தொகை வசூலிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருவதாலும், திடீரென ஏற்படும் வெள்ளப் பெருக்காலும் பிரீமியம் செலுத்துவதற்கு விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டினா். இதற்கான அவகாசம் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்தில் 88 சதவீதம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 2.20 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 85 சதவீதம் விவசாயிகள் தங்களது பயிா்களை காப்பீடு செய்துள்ளனா். அதாவது, 3.30 லட்சம் விவசாயிகள் காப்பீடு பிரீமியம் செலுத்தியுள்ளனா்.
மக்காச்சோளம் 59 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 78 சதவீதம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். 19,500 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 80 சதவீதம் விவசாயிகளும், 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 51 சதவீதம் விவசாயிகளும் காப்பீடு செய்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 4.46 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.