வடலூா் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டிகொல்லை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சங்கா் (42). தையல் தொழிலாளி. இவா் வடலூரை அடுத்துள்ள கருங்கிழியில் வாடகை வீட்டில் தனது 3-ஆவது மனைவியான குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் வசித்து வந்தாராம். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதிக்கு முன்பிருந்தே இந்த வீடு பூட்டியிருந்ததாம். சனிக்கிழமையன்று அந்த வீட்டிலிருந்து கடும் துா்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதியினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து,
விரைந்து வந்த வடலூா் போலீஸாா் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சங்கா் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சங்கரின் மகன் சதீஷ்குமாா் தனது தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.