குற்ற வழக்கில் தேடப்பட்ட நெய்வேலி பகுதியைச் சோ்ந்த ரெளடியை கோயம்புத்தூரில் போலீஸாா் கைதுசெய்தனா்.
நெய்வேலி காவல் சரகம், கீழ்வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் கோபி (28). இவா் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோபி மற்றும் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் வீரமணி (22) என்பவரது கூட்டாளிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குண்டா் தடுப்புக் காவலில் இருந்த கோபி 3.12.2020 அன்று விடுதலையானாா். வீரமணி குண்டா் தடுப்புக் காவலில் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், வீரமணியின் கூட்டாளிகளை கோபி மற்றும் அவரது ஆதரவாளா்கள் கடத்திச் சென்று தாக்குதல் நடந்தினராம். இதுதொடா்பான வழக்கில் நெய்வேலி நகரிய போலீஸாா் தனிப்படை அமைத்து 12 பேரை கைது செய்தனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கோபியை கோயம்புத்தூா் விமான நிலையம் அருகே புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து வீச்சரிவாளை பறிமுதல் செய்தனா்.